கட்டுரை
நின்றசொல்
கவிதைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு விக்ரமாதித்யன்
மின்நூல்
177 பக்கங்கள்
கவிதைகளை நுட்பமாக வாசித்து உணர, தேர்ந்த வாசகரும், பெரும் கவிஞருமான விக்ரமாதித்யன் அளிக்கும் வெளிச்சமே இக்கட்டுரைத் தொகுப்பு.
படைப்புகள் குறித்த முன்முடிவுகள் ஏற்படுவது போன்று தோன்றினாலும், வாசகனுக்கு இவ்வெளிச்சம் அவசியமானது என்றே தோன்றுகிறது.
"வேலை செய்து முரடேரிய உங்கள் விரல்களில் இதம்தரும் மென்மையை நான் அனுபவித்த வேளைகளை எண்ணி ஏங்குகிறேன் இன்று"
கண்டிப்பான தனது தாய் குறித்த மகளின் கூற்று மேற்கண்டது.
வலி தரும் வாழ்வை மேற்கொள்ளவும், கடக்கவும் இலக்கியம் எப்போதும் பெருந்துணையாக வந்து கொண்டே இருக்கிறது வாசகனுக்கு.
இலக்கிய வகைமைகளில் மிகக் குறைவான சொற்களைக் கொண்டு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவிடும் வல்லமை கவிதைகளுக்கே வாய்க்கப் பெற்றிருக்கிறது.
ராஜ சுந்தரராஜனின் 'அறிவுஜீவி' கவிதை கீழ்க்கண்டது.
"இவர்களில் ஒருவனாய் நானும் இருந்தேன் சிறுவயதில், காலம் இடைவந்து எதை எதையோ கற்றுத்தந்தது. ஆள்மாறிப் போனேன் போலும். இன்று தெருவில் ஒரு முகமும் என்னைத் தெரிந்ததாய் இல்லை
வா என்று அழைக்க ஒரு வாய்க்கும் வரவில்லை. அடையாளமற்றுப் போகவா அறிவாளியானேன்? கனக்கிறது மனசு"
பின்பு தான் வருகிறது மீட்சி.
"நடுங்குகிற என் கைப்பற்றப் பிரித்து என்னைத் தனக்குள் இழுக்கிறது புத்தகம் இப்படியே இன்னும் எத்தனை நாள் தப்பித்தல்?"
நுண்ணுணர்வு கொண்டவனுக்கு, இலக்கிய வாசகனுக்கு சமூகப் புறக்கணிப்பும், விலகலும் முடிவு செய்யப்பட்டு விடுகின்றன.
வாசகன் ஒருபோதும் கலங்குவதில்லை. அவனை வாரி அணைத்து, தன் மாய உலகத்துக்குள் அனுமதிக்க புத்தகம் எப்போதும் தயாராகவே உள்ளது.
'சப்தம் நவீன கவிதைக்கு சத்துரு'
'புட்டு வைப்பது கவிதையை பங்கப் படுத்தும்'
உள்ளமிழ்ந்த த்வனி உயர் கவிதையின் லட்சணம்'
'இருண்மை வாசக பங்கேற்புக்கு வழிவிடும்'
விக்ரமாதித்யனின் மேற்கண்ட வரிகள் கவிதை போன்றே உள்ளவை.
Comments
Post a Comment