நாவல்
அருகன்மேடு
ரமேஷ் பிரேதன்
யாவரும் பதிப்பகம்
128 பக்கங்கள்
கடலும், காமமும் மிகையின்றி பல்கிப் பெருகி ஆர்ப்பரிக்கும் புனைவு. முதல் அத்தியாயத்தின் முதல் பத்தியும், இறுதி அத்தியாயத்தின் நிறைவு பத்தியும் ஒரே மாதிரியாக அமைந்து கச்சிதமாக பொருந்தி விடுகிறது.
எழுத்தே எழுத்தினை எழுதிச் செல்கிறது என்று எங்கோ வாசித்த நினைவு. பூடகமான மொழியில் படைக்கப்பட்டிருக்கும் இந்நாவல் வாசகனின் பிரக்ஞைக்கு சவால் விடுக்கும் வகையில் புனையப்பட்டுள்ளது.
வள்ளத்தான்-ரேமா உரையாடல்கள் கவித்துவமாக நாவலெங்கும் விரவிப் பரந்துள்ளது.
வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மனைத் துணைக் கொண்டு கடலில் கால்நனைப்பவனாக, எளியவனாக தன்னை ரேமாவிடம் முன்னிறுத்துகிறான் வள்ளத்தான்.
எதையும் திட்டமிடாதவளாக, காற்று வீசும் திசையில் அடித்துச் செல்லப்படுபவளாக தன்னிலை விளக்கம் அளிக்கிறாள் ரேமா.
அருகன்மேடு அகழ்வாய்வு பகுதிகளும் உரையாடல்களில் இடம்பெறுகின்றன.
தனது தாய், தந்தையை முறையே பானையிலிருந்து வந்தவராகவும், பிணத்தின் அடிவயிற்றில் இருந்து வந்தவளாகவும் வள்ளத்தான் ரேமாவிடம் உரைக்கிறான். சமூகம் என்பது கதைகளால் ஆனது என்ற குறிப்பும் அப்போது இடம்பெறுகிறது.
இறந்த பின் மனித உடல் மண்ணுக்கும், நெருப்புக்கும் தருவதற்குப் பதிலாக கடலில் இடுவதும், கழுகுகள், விலங்குகள் உண்ணும் வகையில் பாறைகளில் இடுவது தொடர்பான குறிப்புகளும் நாவலின் வருகின்றன.
'கடல் ஒரு உப்புநீர் பாழ்வெளி. அதனுடன் உழன்று வாழும் வலியை மகா காவியங்களில் யாரும் இதுவரை பதிவு செய்யவில்லை. கடலுக்கு வெளியே கடலைக் கணக்கிட்டு வாழும் தொல் குடியின் தொடர்ச்சி இத்தீபகற்பத்தின் விளிம்பில் நின்று நீர் வெளியை பசியோடு நோக்குகிறது'
நாவலில் இடம்பெறும் மேற்கண்ட வரிகள் நிலம் எங்கும் விரவி பரவியிருக்கும் பெரும் மன அழுத்த நீக்கியாக அறியப்படும் சமுத்திரத்தை மிக அருகில் நுண்மையாக அவதானித்தவன் மட்டுமே சொல்ல முடிந்தவை.
செங்கேணி என்று வள்ளத்தானால் அழைக்கப்பெறும் செங்கழுநீராள் என்ற ஆபெண், ரேமாவுடன் ஒப்பிடப்படுகிறாள்.
ஆபெண் என்ற பெயர் ஆணாக பிறந்து பெண்ணாக மாறிவிட்ட திருநங்கையை குறிப்பதாக அமைகிறது.
கவித்துவமான மொழியில் அமைந்துள்ள நாவல் மீஎதார்த்தவாதமும், பின்நவீனத்துவமும் கொண்டு புனையப்பட்டுள்ளது.
Comments
Post a Comment