நேசம்

 நேசம்

லா.ச.ராமாமிருதம்

மின்நூல்

179 பக்கங்கள்



லா.ச.ராவின் 11 சிறுகதைகளின் தொகுப்பு இம்மின்நூல்.


 கண்கட்டு, காதில் பஞ்சு சகிதம் உப்பில்லா பட்டினியுடன் மௌன விரதம் அனுசரிக்கிறார் பணி ஓய்வு பெற இருப்பவர்.


 நவராத்திரி நாட்களில் நடைபெறும் இவ்விரதம் அவரது புறச்சூழல்களில் ஆச்சரியங்களையும், நகைப்புகளையும் கொண்டு வருவதுடன், பெரும் அதிர்வுகளை அவருக்கு ஏற்படுத்தி விரதம் முடிவுக்கு வருகிறது.


 சிறு பிணக்கு ஒன்றின் பொருட்டு வீட்டை நீங்கிச் சென்றவர், மீளவும் அவ்விடம் திரும்புகிறார்.


 மஞ்சள், குங்குமத்தை தவிர்த்துவிட மறுக்கும் அம்மாவிடம் பெரும் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது.


 விருந்தாளியாக அறியப்பட்ட பெரியவர், இரவு உணவு கொள்ளவும் மறுக்கிறார். கதவை திறந்து வைக்க நிர்பந்திப்பவர் விடியும்முன் அவ்விடம் நீங்கிச் செல்கிறார்.


 ஜன்னலோரத்தில் சாக்லேட் ஒன்றுடன், தோடுகள் இரண்டும் தமது இருப்பின் மூலம் வந்திருந்தது யார் என்பதை விளக்கி விடுகின்றன.


 குழந்தைகளின் பார்வையில் பெரியவர்களின் ஊடலை அழகாக உணர்த்துகிறது 'அப்பாவின் மீசை' கதை.


 தொகுப்பின் நீண்ட கதை 'பாலா'. இந்நூலின் வாசிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இக்கதைதான்.


 மேனேஜர் அம்பியிடம் கனிவுடன் நடந்து கொள்கிறார். கடும் பத்தியத்துடன் உணவு உட்கொள்பவர், வீட்டில், வெளியில் தனது பழக்கங்களை மாற்றியமைக்கிறார்.


 தங்குமிடம், உணவுக்காக பணம் பெற்றுக்கொள்ள மறுத்து, அம்பியின் சம்பளத்தை முழுமையாக சேமிக்கச் சொல்கிறார்.


 அவர் அளிக்கும் ஊக்கம், அவனைத் தொடர்ந்து படிக்கச் செய்வதுடன், பதவி உயர்வுடன் பணியிட மாற்றமும் அவனுக்கு கிடைக்கிறது.


 நடைபெற்றுவிட்ட துயரச் சம்பவங்களை அவனிடம் பகிர்ந்து கொள்கிறார் அவர்.


'மெய்யான படிப்பு முடிந்தபின்தான் ஆரம்பம் ஆகிறது. நம்முடைய படிப்புமுறை அப்படியிருக்கிறது. பரீட்சை தேறுவதுதான் நோக்கம்'.


 மேற்கண்ட வரிகள் மதிப்பீட்டு முறை நமது கல்வியமைப்பை எவ்விதம் பாதித்துள்ளது என்பதை அறிய போதுமானவை.


'கருணையினாலேயே கொல்லும் இந்த வீட்டுக்கு ஏன் வந்தேன்?'


'கருணையும் இரக்கமற்றதுதான்'


 மேற்கண்ட லா ச ரா வின் வரிகள் மனித உணர்வுகளை நுட்பமாகப் புனைவாக்கிவிடும் அவரது மேதமை கொண்ட ஆற்றலுக்குச் சான்றாக விளங்குபவை.

Comments