நாவல்
வாழ்ந்தவர் கெட்டால்
க.நா.சு
மின்நூல்
97 பக்கங்கள்
வாழ்வு குறித்த ஆழமற்ற, மேலோட்டமான புரிதல்களை கேள்விக்குட்படுத்தி, உன்னதமான தரிசனத்தை அளித்திடும் க.நா.சுவின் குறுநாவல் இம்மின்நூல்.
பொருள் வேட்கை கொண்டோ அல்லது சலியாத உழைப்பின் மூலமாகவோ ஒரு தலைமுறை அடைந்துவிடும் பொருளாதார அனுகூலங்கள், தொடர்ச்சியான உழைப்பு இல்லாதபோதும், புறச் சூழல்களின் சாதகமற்ற நிலைகளிலும் எதிர்பாரா வீழ்ச்சிகளை அடைகிறது.
வீழ்ச்சிக்குப் பின்னரும் சமகால சூழலுக்கு பொருந்தாமல், ஸ்தானத்தை தக்கவைக்கவும் இயலாமல் வாழ்வு நெருக்கடிகள் மிகுந்ததாகவே மாறிவிடுகிறது.
மம்மேலியார் குடும்பத்தினர் ரகுவின் மீது நேர்மறை சிந்தனை கொண்டவர்களாகவே இருந்தபோதும், தன் தந்தையின் செய்கைகள் குறித்து குற்ற உணர்வினால் பீடிக்கப்பட்டு சதாசிவத்தை கடுமையாக வெறுக்கிறார் ரகு.
சதாசிவம் கொஞ்சமும் கூச்சமில்லாமல் பிறரது பணத்தில் காலம் தள்ள எண்ணுவதும், அனைவரது எள்ளல்களை உதாசீனப்படுத்துவதுமாக வாழ்கிறார்.
'வாழத் தகுதியற்றவன்' என்ற சொல்லை கேட்ட மறுவினாடி ரயில் முன் பாய்ந்து உயிர் துறக்கிறார்.
என்னதான் நடந்திருக்கும் என்று அறியும் ஆர்வ மிகுதியில் செயல்படும் ரகுவின் நண்பர் பெரும் குற்ற உணர்வுக்கு ஆளாகிறார்.
'அவன் ஆத்மாவுக்கு சாவிலோ, சாவைப் போன்ற ஒரு உணர்ச்சியற்ற தன்மையிலோதான் அமைதி கிடைத்திருக்கக் கூடும் என்று உணர்ந்த நான், அவன் இறந்ததற்கு வருந்தவில்லை. இருந்து பட்டதற்கெல்லாம்தான்'
மரணம் பெரும் விடுதலையாகவே இருக்கும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் க.நா.சுவின் வரிகள் மேற்கண்டவை.
பிள்ளைப் பருவத்தில் ஓடியாடிய நாட்களும், வலம்வந்து மகிழ்ந்த இடங்களும் நினைக்கையிலேயே பரவச நிலையை அளித்துவிடுகின்றன.
கதை சொல்லியும், ரகுவும் காலாற நடக்கிறார்கள். இடைவிடாமல் பேசிக்கொள்கிறார்கள். நீண்ட உரையாடல்களுக்கு இடையிடையே தேவைப்படும் மௌனங்களும் அங்கு உண்டு.
சிறுவயதில் பழக்கப்பட்ட இடங்களை பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்று பார்ப்பது ஒரு ஆத்மீக அனுபவம் என்கிறார் க.நா.சு
உணர்ச்சி வயப்பட்ட ரகுவும், சமநிலை கொண்டவர்களாக மம்மேலியார் குடும்பத்தினரும் வாழ்வு குறித்த சில புரிதல்களை ஏற்படுத்தி விடுகிறார்கள். இப்புனைவின் பெரும் பெரும் வெற்றி அதுவே.
Comments
Post a Comment