கானகத்தின் குரல்
கானகத்தின் குரல்
ஜாக் லண்டன்
பெரியசாமி தூரன்
181 பக்கங்கள்
உரையாடல்களே இடம்பெறாத கதை சொல்லுதல் பாணியிலேயே அமைந்திருக்கும் நாவல் இது.பூமியின் வடதுருவத்திற்கு ஆர்ப்பாட்டமின்றி நம்மை அழைத்துச் சென்றுவிடும் புனைவு.
நீதிபதி ஒருவரின் பங்களாவில் சுகமாக வாழ்ந்து வரும் நாய் 'பக்', வணிகரீதியான பயன்பாட்டிற்காக திருடப்பட்டு பயிற்றுநர்களின் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
'பக்' போன்றே பல புதிய நாய்களும் அங்கு வண்டி இழுப்பதற்காக பயிற்றுவிக்கப்படுகின்றன. தடியால் பலமுறை தாக்கப்பட்டும், பழகிய மற்றொரு நாயினால் கடிபட்டும் நிதர்சனத்தை உணர்ந்து பணிந்து போகிறது 'பக்'.
புதிய சூழலில் தனது செல்வாக்கினை ஏற்படுத்திக் கொண்டு அனைவரையும் வசீகரிக்கிறது.
ஆடம்பரமான மாளிகை வாசத்திலிருந்து உணவுக்கு பிற நாய்களுடன் போட்டியிட வேண்டிய சூழலுக்கு தன்னை தயார் செய்து கொள்கிறது.
முதலிடத்தில் நீடிக்கும் நாயுடன் பலமாக போட்டியிட்டு வென்று, அவ்விடத்தை கைப்பற்றுகிறது.
பனிப்பாறைகளால் உறைந்துவிட்ட ஆற்றினூடே பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை இந்நூல்.
'டாஸன்' பகுதியை நோக்கி வண்டிகள் கிளம்புகையில், தார்ண்டனின் அறிவுரையை பொருட்படுத்தாமல், பனி உருகிக் கொண்டிருக்கும் வேளையில் பயணத்தைத் தொடர எண்ணுகிறார்கள் மற்ற இருவர்.
எதிர்பார்த்தது போன்றே வண்டி விபத்துக்குள்ளாகி மரணம் அடைகிறார்கள் அனைவரும்.
அலாஸ்காவுக்கு அருகாமையில் தங்கம் கிடைப்பதாக எண்ணி, உறைபனி சூழ்ந்த பகுதிகளில் நாய்கள் பூட்டிய வண்டிகளில் பயணிக்கின்றனர்.
நாய்களின் தேவை அதிகரிப்பினால், அவை திருடப்படுகின்றன. பெரும் எண்ணிக்கையில் தங்க வேட்டைக்கு செல்பவர்களால், கடிதப் போக்குவரத்து மேற்கொள்ளும் பொருட்டு அரசும் வண்டிகளை தயார் செய்கிறது.
தங்கத்தை வென்று திரும்பியவர்களைக் காட்டிலும், நோயுற்று தோற்றவர்களின் எண்ணிக்கை பலமடங்காக இருந்திருக்கிறது.
40 வயதிலேயே மரணம் அடைந்துவிட்ட ஜாக் லண்டனின் அற்புதமான புனைவு இது. பெரியசாமி தூரன் அழகிய தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
கால நெருக்கடி ஏற்படின், மறைக்கப்பட்ட தனது இயல்பான நடத்தைகளை மீட்டெடுத்து வாழும் பொருட்டு எந்த உயிரும் போரிடும் என்பதை உணர்த்தி விடுகிறது இந்நாவல்.
Comments
Post a Comment