வாழ்க்கை வரலாறு
எம் கே தியாகராஜ பாகவதர்
விந்தன்
மின்னூல்
205 பக்கங்கள்
50 வயதுகூட வாழ்ந்து முடிக்காமல், பிறர் நினைத்து பார்க்கவே இயலாத சாதனைகளை நிகழ்த்தி சென்ற பெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாற்று நூல் இது.
சிறு வயது வறுமை மட்டுமன்று, இளவயதில் அவரை நாடிவந்த பெரும் செல்வமும், நம்பவே முடியாத புகழும் இறுதியில் நிகழ்ந்துவிட்ட பெரும் சோகமும் எந்த ஒன்றும் அப்பெருமகனை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
அவருக்கு முந்தைய காலத்தில் மட்டுமல்ல, பிந்தைய காலத்தில் கூட பாகவதர் போன்ற கலைஞன் இருக்கப்போவதில்லை.
'நான் மக்களை நாடிச் செல்கிறேன். மக்களோ, பாகவதரை நாடிச் செல்கிறார்கள்' இசைவாணர் குறித்து கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் கூறிய வார்த்தைகள் இவை.
தனது திறனையும், உழைப்பையும் மட்டுமே நம்பி வாழ்ந்திருக்கிறார் அவர்.
இசையும், சினிமாவும் அவரை நாடி ஆக்கிரமித்துக் கொண்டது போன்று, பெருந்துன்பமும் அவரை நெருக்கி வீழ்த்திவிட்டது பெரும் சோகம்.
பேரம்பேசி சம்பளம் நிர்ணயிக்காதவர் என்பதோடு, சிறை செல்ல நேர்ந்த தருணத்தில் சொத்துக்களை விற்று தான் பெற்ற முன்பணங்களை திருப்பி வழங்குமாறு கூறியிருக்கிறார்.
தன் துறையில் பிறர் சாதிக்கையில் ஏற்றுக்கொண்டுவிடும் பெருந்தன்மையும் பாகவதரிடம் இருந்திருக்கிறது.
மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பவராக, செயற்கை பூச்சுகளற்ற உண்மையானவராக, தனிநபர் வழிபாட்டில் ஆர்வம் அற்றவராக தூய வாழ்வு வாழ்ந்திருக்கிறார் அவர்.
இசையில் மையப்படுத்தப் பட்டிருந்த தமிழ் சினிமா, வசனங்களை நோக்கி நகரத் துவங்கியமை, பாகவதரின் சிறை நாட்களுக்குப் பிந்தைய இரண்டாம் கட்ட வெற்றிகளை சாத்தியமில்லாமல் ஆக்கிவிட்டிருக்கிறது.
வறுமையில், கண்பார்வை இழந்தவராக அப்பெருங்கலைஞன் மடிய நேர்ந்துவிட்டது தமிழ் சினிமாவின் மாபெரும் சோகம்.
பாகவதரின் வாழ்வும், வீழ்ச்சியும் பிந்தைய தலைமுறை கலைஞர்களுக்கு பாடமாக அமைந்து, பாதுகாப்பான சூழலில் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் அழியாப் பெருஞ்சுடர் எம். கே. தியாகராஜ பாகவதர்.
Comments
Post a Comment