நாவல்

மலர் மஞ்சம்

தி ஜானகிராமன்

ஐந்திணைப் பதிப்பகம்

584 பக்கங்கள்



 அன்பு என்னும் உன்னத மாயக் கயிற்றினால் வலுவாகப் பிணைக்கப்பட்டுவிட்ட கதை மாந்தர்களை வேறு எந்த புனைவுகளையும்விட தி.ஜாவின் எழுத்துக்களில் கண்டுணரலாம். நம்பவே முடியாத ஆச்சரியம் அளிக்கும் அபூர்வ மனிதர்கள் அவர்கள்.


 வாழ்வில் எதிர்கொண்ட சங்கடம் அளிக்கும் தருணங்களை மீளாய்வு செய்யவும், அளித்திருக்க வேண்டிய எதிர்வினைகள் குறித்தும் காலதாமதமாகவாவது அறிந்து கொள்ள முடிகிறது.


 இக்கட்டான காலங்களில், கையறு நிலையில் அவ்விடம்விட்டு அகன்றுவிடவே மனது துடிக்கிறது. இடப்பெயர்வு ஏற்படினும் மனம் முந்தைய இடத்திலேயே நிலைத்து விடுவதை மறுக்க இயலவில்லை.


 'உலகத்தில் அறிவு பிறந்த அன்றே நிம்மதியும், அமைதியும் போய்விட்டன',


'நன்றி கெட்டவர்களுக்கு மேலே மேலே நல்லது செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?'


'இவ்வளவு முழுமையுடன் அழிப்பதற்கு மனிதனால் தான் முடியும்'.


 அறியாமையில் பெறக்கூடிய குறைந்தபட்ச பாதுகாப்பு, இன்பம், எதிர்பார்த்தலின் பின்விளைவான பெரும் ஏமாற்றம், கட்டற்ற மனிதனின் வன்செயல்கள் மேற்கண்ட வரிகளில் தி.ஜாவின் எழுத்துக்கள் மட்டுமே அளிக்கக்கூடிய உன்னத தரிசனங்கள் இவை.


 தி.ஜாவின் புனைவுகளில் பெண்கள் ஆண்களின் வசீகரத்தை வெளிப்படையாக கண்டு, மகிழ்ந்து வியக்கிறார்கள்.


இவை அனைத்தும்  மனித இயல்பூக்கங்கள்தான் எனினும், எழுத்துக்களில் பொங்கிவழியும் வாஞ்சை வாசகனை சிலிர்க்க வைக்கிறது.


 நேர்மையாளனாக அல்லது நடுநிலையாளனாக நீடிப்பதில் உள்ள சிரமம், இரு தரப்பையும் பகைத்துக்கொள்ள வேண்டி இருத்தல், எவருடனும் பொருந்த இயலாத கடினநிலை.


'கைக்கு எட்டாத உயரத்தில் ஒன்னு இருந்தா அதை பத்தி தூத்தறதுதான் வழக்கம்'


 'தியாகம் எவ்வளவு ஆழ்ந்த போதை! பிறருக்காக உழைக்க ஆரம்பித்துவிட்டால், தன்உடல், தன்மனம், தன்நினைவு எல்லாம் எப்படி செத்து விடுகின்றன?'


 எவ்விதத் தொடர்பும் இன்றி பிறரை தூற்றுபவர்கள், தன்னலம் இன்றி அனைத்து நிலைகளிலும் அயராது உழைப்பவர்களுக்கு பொருந்திவிடும் வரிகள் மேற்கண்டவை.


 ஒரு சில மாதங்களே வாழ்ந்து பேறுகால மரணமடைந்த மனைவி அகிலாண்டத்தின் இறுதி வார்த்தைகளை விடாப்பிடியாக நிறைவேற்றத் துடிக்கும் ராமையா, மகளின் உணர்வுகளையும் மதித்தல், பாலியின் வாக்குறுதியை காக்கும் பொருட்டு பிதுரார்ஜித சொத்துகளை இழந்து விடவும் துடித்தல், வையண்ணா தரும் சங்கடங்களை புன்முறுவலுடன் கடந்து செல்லவே முயற்சித்தல், மகள் குறித்த முடிவுகளை நாகேஸ்வர ஐயர் மேற்கொள்வதை அனுமதித்தல் என நுண்ணுணர்வு மிகுந்த நபராக இருக்கிறார்.


அறிவார்ந்த குழந்தையாக வளரும் பாலி, பால்யகாலத்தில் நிச்சயக்கப்பட்டவனை அறியும்போதும், பருவ வயதில் ஈர்க்கப்படுபவனிடமும் அணுகல்-விலகல் மனப்போராட்டத்தில் அவதியுறுகிறாள். நாயக்கர் மகனின் கடனுக்காக கச்சேரிகளுக்கும்  உறுதியான சம்மதம் தெரிவிக்கிறாள்.


 பாலியின் மீதான காதலை மறக்க முடியாமலும், அவளது விருப்பத்தை மீறி செயல்பட முடியாமலும் தவிக்கும் தங்கராஜ், வையண்ணாவை கொல்லவும் தயங்கவில்லை.


 கிடைக்கும் நல்ல வேலையை புறக்கணித்து பாலியின் காதலுக்காக சென்னைக்கு படிக்கச் செல்லும் ராஜா, ஐயரின் எதிர்ப்புகளை ஏற்று கண்ணீருடன் விடை பெறுகிறான்.


 ராமையாவுக்கு பல வழிகளிலும் ஆதரவு தரும் நாயக்கர் இறுதிவரை அக்குடும்பத்துடன் வாஞ்சையுடன் பழகுகிறார்.


 தன்னலமின்றி காலம் முழுதும் தம்பியின் குடும்பத்திற்காக உழைக்கும் வடிவு, நாவலின் மற்றுமொரு வியப்பு.


கைம்பெண் ஆனபோதும், புதியதொரு காதலும் மறுக்கப்பட்ட நிலையிலும், உற்சாகத்திற்கு குறைவின்றி அணுக்கமான தோழியாக இருக்கிறாள் செல்லம்.


 ஒருவரே நான்கு திருமணங்கள் செய்து கொள்ளுதல், பெண் குழந்தை பிறந்த அன்றே இணையினை தீர்மானித்தல் போன்ற ஏற்கவியலாத குறிப்புகள் இருந்தபோதும், தி.ஜானகிராமன் கட்டமைக்கும் அன்பு சார்ந்த எழுத்தோவியம் 'மலர்மஞ்சம்', வாசகனை வியக்கவும், ஏங்கவும் வைக்கவே செய்கிறது.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

நடைவழி நினைவுகள் II

கதைகள்