எனது ஆண்கள்

 எனது ஆண்கள்

நளினி ஜமீலா

தமிழில் ப.விமலா காலச்சுவடு பதிப்பகம்


159 பக்கங்கள் 


பாமர மொழியில் தனது வாழ்வின் அனுபவங்களை, நாகரீக சமூகத்தின் அவலங்களை விளக்கிச் செல்கிறார் நளினி ஜமீலா.


சிறிதும் தன்னிரக்கமற்ற பச்சாதாபம் கோராத விவரணைகள் இவை. பகடியாகவே பல நிகழ்வுகளை எழுதிச் செல்கிறார்.


 பாலியல் தொழிலாளியாக சாலையில் நின்று வாடிக்கையாளரை பிடிப்பது முதல், தங்குமிடம் ஏதுமின்றி அலைந்ததுவரை நினைவுகூர்தல் விடுபடலின்றி தொடர்கிறது.


 பணத்தில் குறியாக இருந்தமை, மொட்டை மாடிகளைக் கைப்பற்றியமை போன்ற சாகசங்களுக்கும் நளினியின் வாழ்வில் குறைவில்லை.


 பாலியல் உணர்வு குறித்த அவரது புரிதல் கீழ்கண்டது.


'பாலியல் என்பது தேவைக்கு விழிப்பதும் தேவையில்லை என்றால் அணைந்து போவதுமான ஒன்றுதான்'


 முந்தைய இரவு தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட காவலர், மறுதினம் தகவல் அளித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாக துன்புறுத்தியதையும் சிறிதும் சுயபச்சாதாபமின்றி அவரால் வெளிப்படுத்த முடிகிறது.


 உடலியல் தேவைக்காகவே அணுகிய ஆண்களில் ஒரு சிலர் தூய காதலைக் கொண்டிருந்ததையும் மகிழ்வுடன் நினைவு கூர்கிறார்.


 பொதுவாகவே ஒரு பெண் மிக வெளிப்படையாக தனது வாழ்வின் ஆண்கள் தொடர்பான நிகழ்வுகளை விவரித்தால், தொடர்புடைய ஆண்கள் தாளமாட்டார்கள்.


 நளினி ஜமீலா தனது ஆண்கள் குறித்து எழுதியிருக்கும் தரவுகள் சமூகத்தையே தோலுரித்துக் காட்டி விடுகிறது.


 புத்திஜீவியாகவோ, எழுத்தாளராகவோ  தான் அடையாளப்படுத்தப் படாமல் வேசியாகவே அறியப்படுவதையும் வருத்தம் இன்றியே கூறிச் செல்கிறார் அவர்.


 துணையாக சில காலம் நீடித்த ஒரு நபர், பொதுவெளியில் உடன் நடந்து செல்லக்கூட அச்சப்பட்டு சிறிது இடைவெளி விட்டு சென்றதையெல்லாம் வாசிக்கையில், ஜி.நாகராஜனின் எழுத்துக்கள் கூட நினைவுக்கு வந்துவிடுகிறது.


 காமம், கோபம் உள்ளிட்ட மனித உணர்வுகளின் இயல்புகள் குறித்த தெளிவான புரிதல்களையும், அனுபவங்களையும் கொண்டிருக்கும் பெரும் சிந்தனையாளர் நளினி ஜமீலா.


 பொய்களற்ற, பூசி மெழுகிவிடாத எழுத்துக்களை கொண்டிருக்கும் நூல் இது.அதனாலேயே ஒரு இலக்கியப் பிரதிக்கு உரிய இடத்தை தக்க வைத்து விடுகிறது இப்படைப்பு.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்